Tuesday, June 14, 2016

காளியின் வரலாறு

தாருகன் என்று ஓர் அரக்கன் இருந்தான். அவன் சிறந்த சிவ பக்தன். சிவபெருமானை நோக்கி கடுமையான தவமிருந்தான். அவனது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், அவன் முன்பாக தோன்றினார். என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார்.

தனக்கு ஒரு வரம் வேண்டும் என்றும், இளம் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்றும் கேட்டான் தாருகன். சிவபெருமானும் அவன் விருப்பப்படியே வரத்தைக் கொடுத்து அருளாசி வழங்கி மறைந்தார். வரம் பெற்ற தாருகனிடம் அநியாயம் தலைதூக்கியது. அவனது ஆட்டம் அதிகமானது.

அசுரனான அவன் தேவர்களுக்கு அளவில்லா துயரத்தைக் கொடுக்கத் தொடங்கினான். அவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் ஓடிச் சென்று முறையிட்டனர். சற்றே யோசித்த சிவபெருமான், தன் வலது கரத்தால் தன் கண்டத்தில் இருக்கும் விஷத்தைத் தடவினார்.

அடுத்த நொடி அங்கு ஒரு அழகிய பெண் தோன்றினாள். அற்புத அழகுடனும், தீட்சண்யமான பார்வையுடனும் அவதரித்த அந்தப் பெண்ணே காளிதேவி ஆவாள். கண்டத்திலிருந்து உருவான காளிதேவி, சிவபெருமானை வணங்கி நின்றாள்.

‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று சிவபெருமானிடம் கேட்டாள் காளிதேவி. ‘தாருகன் என்ற அசுரனை அழித்து வா’ எனக் கட்டளையிட்டார் சிவபெருமான். காளிதேவி ஒரு பெரிய படையை உருவாக்கி தாருகனுடன் போரிட்டு அவனை வதம் செய்து அழித்தாள்.

சிவனால் தோற்றுவிக்கப்பட்ட காளிதேவி பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள். வரதான சொரூபிணி, நிகம்ப சூதனி, யோகப்பிடாரி, தாண்டவக் காளி, சுகாசனக் காளி எனப் பல பெயர்கள் காளிதேவிக்கு உண்டு. பக்தர்களை இன்முகத்துடன் பத்திரமாகக் காப்பதால் பத்ரகாளி என்றும் அழைக்கப்படுகிறாள்.

No comments:

Post a Comment